Headlines News :
Home » » தமிழர்களின் பாரம்பரியங்களை இல்லாதொழிக்கிறது இராணுவம் சிங்கள குடியேற்றங்களையும் சாடி சி.வி உரை

தமிழர்களின் பாரம்பரியங்களை இல்லாதொழிக்கிறது இராணுவம் சிங்கள குடியேற்றங்களையும் சாடி சி.வி உரை

வடக்கும் கிழக்கும் தமிழர்களின் பாரம்பரிய நிலம் என்ற கருத்தை இல்லாமல் செய்யும் வகையில் சிங்களக் குடியேற்றங்கள் இங்கு அரசினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கிருமி நாசினி போல் இங்குள்ள இராணுவம் எமது பாரம்பரியங்களினை முற்றாக அழித்துவிடும் நடவடிக்கைகளினை மேற்கொண்டு வருகின்றது என வடக்கு மாகாண முதலமைச்சரும் முன்னாள் நீதியரசருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தொல்புரம் ஆரம்ப மருந்து பராமரிப்பு நிலையத்திறப்புவிழா நேற்றுக்காலை 10.30 மணிக்கு நடை பெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவிக்கையில், வட - கிழக்கு மாகாணங்களானவை எமது தமிழ்ப் பேசும் மக்களின் பாரம்பரிய இடங்கள். 

இப்பொழுது அவற்றின் தொடர்புகளைக் கொச்சைப்படுத்த, தமிழரின் முழுமையான தொடர் இடம் என்ற கருத்தை அப்புறப்படுத்த அரசாங்கத்தினால் பலவிதமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 

கிழக்கும் வடக்கும் சேரும் இடங்களைத் தொடர் தமிழ்ப் பிரதேசம் என்று அடையா ளம் காட்டாதவாறு சிங்களக் குடியேற்றங்கள் நடைபெற்று வருகின்றன.

கடந்த செவ்வாய் கொக்குளாய், கொக்குத்தொடுவாய் போன்ற இடங்களைச் சென்று பார்த்தேன். களப்பின் அடுத்த பக்கத்தில் கிழக்கு மாகாணக் கிராமமான தென்னமரவாடி இருக்கின்றது. 

தொடர்ச்சியாகத் தமிழ்ப் பேசும் மக்கள் வாழ்ந்த அந்த இடத்தில் தமிழர் தாயகம் தொடர்ச்சியாக என்றுமே இருந்ததில்லை என்று காட்டும் நோக்கில் அங்கு சுமார் 350 சிங்களக் குடும்பங்கள் கொண்டுவரப்பட்டு குடியேற்றப்பட்டுள்ளார்கள்.

முன்னர் நீர்கொழும்பில் இருந்து காலத்திற்குக் காலம் வட கிழக்குப் பருவப் பெயர்ச்சியின் போது சில மாதங்களுக்கு மீன் பிடிப்பில் ஈடுபட அங்கு வந்தவர்கள் தற்போது தமது குடும்பங்களையும் கொண்டு வந்து குடியேறியுள்ளார்கள். இவர்களுள் முன்னர் அங்கு வந்து சென்ற சிங்கள மீன்பிடியாளர்களை விட வேறு நூற்றுக்கணக்கான பலரும் அடங்குவர். சிறிது சிறிதாக அவர்களின் ஆக்கிரமிப்பு  நடந்தேறிக் கொண்டிருக்கின்றது.

இதை ஏன் கூறுகின்றேன் என்றால், இன்றைய காலகடட்டம் மிகப் பொல்லாத காலகட்டமாக மாறியுள்ளது. மிக வேகமாக, மிக உக்கிரமாக ஆக்கிரமிப்பும் வெளியார் குடியேற்றங்களும் இராணுவ உதவியுடன் வட கிழக்கு மாகாணங்களில்  நடந்து கொண்டிருக்கின்றன. 

நாம் வெளிநாட்டில் இருந்து வந்து நம்மவருக்கு வைத்திய வசதிகளையும் கொடைகளையும் தந்து உதவிக் கொண்டிருக்கும் போது எமது பாரம்பரிய நிலங்கள் பறிபோகின்றன.

வட கிழக்கு என்பது தமிழர் தாயகம் என்ற இந்தக் கருத்திற்கு மாறான நடவடிக்கைகள் நடந்து  கொண்டிருக்கின்றன என்பதை உங்கள் எல்லோர் மனங்களிலும் பதிய வைக்க விரும்புகின்றேன். 

பல காணிகளை வடமாகாணத்தினுள், அதுவும் யாழ். குடாநாட்டினுள், இராணுவம் ஆக்கிரமித்து அவற்றைச் சட்டப்படி கையேற்க நடவடிக்கைகள் எடுத்துக் கொண்டிருக்கின்றது.

நாங்கள் எமது வீட்டு நிலத்தைச் சுத்தப்படுத்த ஒரு பாத்திர நீரினுள் ஒரு சில துளி டெற்றோலையோ பைனோலையோ ஊற்றுகிறோம். பின்னர் அந்தப் பாத்திரத்தில் இருக்கும் கிருமிநாச நீர் தன் வேலையைச் செய்கின்றது. 

நிலத்தைச் சுத்தப்படுத்துகிறது. அதேபோல் மக்களின் மத்தியில் அவர்கள் நிலங்களைத் தமதாக்கி அங்கு இராணுவத்தினரைப் வதிய வைத்து விட்டார்களானால் அதன் பின் அங்குள்ள கலாசாரப் பண்புகளையும், வாழ்க்கை முறைகளையுஞ் சுற்றாடலையும் ஏன் வழங்கு மொழியினைக் கூட மாற்றி அமைத்து விடலாம்.

கிருமி நாச நீர் போல் இருந்து பாரம்பரியங்களை முற்றாக அழித்து விடலாம். பலருக்கு இங்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் இனப் படுகொலைக்கொப்பான நுண் ணிய நடவடிக்கைகள் புரிவதாகத் தெரியவில்லை. 

மரங்களைக் காண்கின்றோம். ஆனால் அங்கு இருக்கும் வனத்தை அடையாளம் காணாது வாழ்கின்றோம். 

அன்றாட தேவைகளில் மூழ்கி விடுகின்றோம்.எமக்கு இன்று தடையின்றிக் கொடை கொடுத்ததைக் கொண்டாடும் இந்த விழாவிலே மனக் கசப்பைத் தரும் விடயங்களை இவர் பேசுகின்றாரே என்று என்  அன்பார்ந்த மக்கள் நினைத்து விடக் கூடாது. 

நாங்கள் போய்ப் பார்த்தால்தான் நடைபெறும் அனர்த்தங்கள் புரிபடும். ஒட்டிசுட் டானில், கொடுத்த அனுமதிப்பத்திரத்திற்கு மேலதிகமாக மூன்று மடங்கு கருங்கல்லைத் தெற்கிலிருந்து வந்துள்ள ஒரு கம்பெனி  அகழ்ந்தெடுத்துச் சென்றுள்ளது.

இது எப்படி நடந்தது என்றே புலப்படவில்லை. கொழும்பில் தரப்பட்ட அனுமதிப் பத்திரம் என்பதால் எம் மாகாண அலுவலர்கள் அதைப் பற்றிக் கவனம் செலுத்தாமல் இருந்தார்களோ அல்லது அவ்வாறு இருத்தி வைக்கப்பட்டார்களோ எமக்குத் தெரியாது. 

மருத்துவ பாரமரிப்பு நிலையம் இங்கு கட்டப்பட்டுத் திறந்து கொண்டிருக்கும் போது எமது வளங்கள் குறையாடப்பட்டுக் கொண்டிருக்கின்றன. எனவே எமது மக்களுக்கு இங்கு நடப்பதைத்தான் நான் கூறி வைக்கின்றேன். இந்த இனிமையான நன் நாளை துயரப்படிவு கொண்ட நாளாக மாற்றுவது எனது நோக்கமல்ல.

எமது மக்களின் ஒற்றுமைப்பாடும் ஒருமித்த சிந்தனையும் கூட்டுறவும் ஒத்துழைப்புமே எமக்கு வருங்காலத்தில் வளம் கொடுக்கும், வாழ்வைத் தருவன. 

இந்தக் கூட்டுற வுக்கு அடிகோலும் விதத்திலேயே இராஜபட்சம் ஸ்ரீரங்கபட்சம் அவர் கள்  நடந்து கொண்டிருக்கின்றார். அவருக்கு எமது மனமார்ந்த நன்றிகள் உரித்தாகட்டும்.

அவரைப் போல சுற்றுச் சூழலை, பிரதேசத்தை, கட்டமைப்புக்களைக் கட்டித் தந்து உதவ பலர் முன்வர வேண்டும் என அவர் தெரிவித்தார்.    
Share this article :

Banner Ads

Friends Site